கிரெடிட் கார்டு வகைகள் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Friday 14 April 2017

கிரெடிட் கார்டு வகைகள்


கிரெடிட் கார்டுகள் பலவிதம்!

தேவைகள், செலவுகளைப் பொறுத்தே கிரெடிட் கார்டை தேர்வு செய்யவேண்டும்.
கிரெடிட் கார்டுகளில் பலவகை உண்டு. யாருக்கு எந்தவகை கார்டு கிடைக்கும், எந்தவகையான கார்டு யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னை அண்ணாநகர் கிளை, ஆக்ஸிஸ் பேங்க், முதன்மை விற்பனை அதிகாரி விநோத்.
பலவகை கார்டுகள்!
க்ளாஸிக் கார்டு / சில்வர் கார்டு:
குறைந்தபட்ச ஆண்டு வருமானம் கொண்டவர் களுக்கு இந்தவகை கார்டு கிடைக்கும். ஆண்டு வருமானத்தை அடிப்படை தகுதியாகக் கொண்டாலும், விண்ணப்பதாரரின் கிரெடிட் மதிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்தவகை கார்டு கிடைக்கும்.
சில நிறுவனங்கள் மட்டுமே இந்தவகை கிரெடிட் கார்டுகளை தருகின்றன. குறைந்த வருமானம் கொண்டவர்கள், எப்போதாவது அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்கிற வகையில் இந்த கார்டை பயன்படுத்தலாம். நிகர வருமானத்தில் இருந்து 30%  வரை கடன் வரம்பு இருக்கும்.
கோல்டு கார்டு:
குறைந்தபட்ச வருமானப் பிரிவினருக்கானது இது என்றாலும், சிபிலில் கிரெடிட் மதிப்பு நன்கு பராமரிப்பவர்களுக்கு இந்த வகை கார்டு கிடைக்கும். நிகர வருமானத்திலிருந்து 30% கிரெடிட் வரம்பு கிடைக்கும்.
சில்வர் கார்டை பயன்படுத்தி முறையாக திருப்பிச் செலுத்து கிறவர்களுக்கு கடன் வரம்பை அதிகரித்து இந்தவகையிலான கார்டு அனுமதிக்கப்படும். கார்டு பயன்பாடு அதிகமாக உள்ளவர்கள் இந்த கார்டினை வாங்கிக்கொள்ளலாம்.
ப்ளாட்டினம் கார்டு:
உயர் வருவாய்ப் பிரிவி னருக்கு இந்தவகை கார்டு பொருத்தமானது. கிரெடிட் கார்டு மூலம் அதிக செலவு செய்பவர்கள் இந்த வகையிலான கார்டினை வாங்கிக்கொள்ளலாம். தவிர, விண்ணப்பதாரரின் வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு தரப்படும். இந்தவகை கார்டுகளில் விமான நிறுவனங் களின் ஏர்வேஸ் கார்டுகள் கிடைக்கும்.
டைட்டானியம் கார்டு:
இதுவும் உயர்வருமானப் பிரிவினருக்கானது. இந்த வகை யிலான கிரெடிட் கார்டுகளுக்கு கடன் வரம்பு கிடையாது. நீண்டநாள் வாடிக்கையாளராக இருக்கும் உயர் வருமான பிரிவினருக்கு இந்தவகை கார்டுகள் ஒதுக்கப்படும். குறிப்பாக, அதிக வருமானம் கொண்ட சுயதொழில் செய்பவர்களுக்கு இந்தவகை கார்டுகள் பொருத்தமாக இருக்கும்.
பெட்ரோல் கார்டு:
நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், அடிக்கடி சொந்த வாகனத்தில் வெளியூர் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்த கார்டினை வாங்கிக் கொள்ளலாம். இந்த கார்டினை பயன்படுத்தி பெட்ரோல் செலவு செய்திருக்கும்பட்சத்தில் சலுகையாக புள்ளிகள் தரப்படும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். ஒரே நிறுவனம் பல்வேறு பெட்ரோல் நிறுவனங்களுடன் கூட்டுவைத்திருக்கும் கார்டுகளும் கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப இந்த கார்டுக்கு விண்ணப் பிக்கலாம்.
ஏர்லைன்ஸ் கார்டு:
ப்ளாட்டினம் மற்றும் டைட்டானியம் கார்டு வகை வாடிக்கையாளர்களுக்கு இந்த வகை கார்டுகள் தரப்படும். அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்தவகை கார்டுகளை வாங்கலாம். நாம் பயன்படுத்தும் தொகைக்கு ஏற்ப ரிவார்டு பாயின்ட் அல்லது கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.
ஷாப்பிங் கார்டு:
பெருநகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள் வைத்துள்ள நிறுவனங்களோடு கூட்டு வைத்துக்கொண்டு தருகிற கார்டு இது. (உதாரணமாக, ஷாப்பர்ஸ் ஸ்டாப் கிரெடிட் கார்டு). பெட்ரோல் கார்டு, ஏர்லைன்ஸ் கார்டு போல அடிக்கடி ஷாப்பிங் செய்பவர் களுக்கு இந்தவகை கார்டுகள் பயன்படும்.
ஆட் ஆன் கார்டு:
ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டுடன் இணைந்த கூடுதல் கார்டு இது. இதற்கென தனியாக கிரெடிட் மதிப்பு எதுவும் கிடையாது. கணவன் / மனைவி / குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கிரெடிட் கார்டுக்கு அதிகபட்சமாக மூன்று ஆட் ஆன் கார்டு வரை அனுமதிக்கப்படும்.''
உங்கள் தேவை அல்லது நீங்கள் செய்யும் செலவைப் பொறுத்து உங்களுக்கு பொருத்தமான கிரெடிட் கார்டினை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
- நீரை.மகேந்திரன்.
உங்களுக்குக் கிடைக்குமா?
விண்ணப்பதாரருக்கு அடிப்படைத் தகுதியாக, மாதச் சம்பளம் பெறுபவர் எனில், ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.1,80,000 இருக்கவேண்டும். இந்த வரம்பு நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். சில நிறுவனங்கள் இந்த வரம்பை ரூ.2,00,000 - 2,40,000 என வைத்துள்ளன.
சொந்தமாக தொழில் செய்பவர் எனில், ரூ.1,50,000 வரை வருமானம் இருந்தால்கூட சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் அதிகரிக்க அதிகரிக்க கடன் பெறும் தகுதியும் அதிகரிக்கும். அதற்கேற்ப அதிக கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகள் பெற தகுதி உடையவராவார்.
கிரெடிட் கார்டு பெற வயதும் ஒரு முக்கியமான தகுதியாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 70 வயது வரை அனுமதிக்கப்படும். இதிலும், நிறுவனத்துக்கு ஏற்ப வித்தியாசங்கள் உண்டு. சில நிறுவனங்கள் 60 வயது வரை மட்டுமே கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் வித்தியாசம் கிடையாது.
கடனுக்கான வட்டி:
எப்படி கணக்கிடுகிறார்கள்?
கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை இஎம்ஐ முறையில் கட்டலாம் என்பது அதிலுள்ள கூடுதல் சிறப்பு. சிறுகச்சிறுக கட்டமுடியும் எனில், இஎம்ஐ முறையைத் தேர்ந்தெடுக்கலாம். கிரெடிட் கார்டு கடன்களுக்கு ஃபிக்ஸட் ரேட், வேரியபிள் ரேட் என இரண்டு முறைகளில் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால், வட்டியைக் கணக்கிடுவதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றுகின்றன.  
சில நிறுவனங்கள் கிரெடிட் காலத்துக்குள் வட்டி கிடையாது என்று சொன்னாலும், ப்ராஸஸிங் சார்ஜஸ் போன்ற கட்டணங்கள் சில பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்குப் பிடிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் பிடிக்கப்படுவதில்லை என இவற்றை ஆஃபர்களாக சில இடங்களில் வழங்கப்படலாம்.
  
குறிப்பிட்ட கிரெடிட் காலத்துக்குள் பணத்தைக் கட்டிவிடுவது நல்லது. தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி கணக்கிடப்படும். மேலும், புதிதாக வாங்கும் பொருட்களுக்கான கிரெடிட் காலம் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கும் வாங்கிய முதல் நாளிலிருந்தே வட்டி கணக்கிடப்படும். அதாவது, முழுவதுமாக கிரெடிட் காலம் கிடையாது. இதனோடு சேர்த்து தாமதக் கட்டணம், ப்ராஸஸிங் சார்ஜஸ், அபராதக் கட்டணம் என உங்கள் கழுத்தை நெரிக்கலாம்.
பொருட்களை வாங்குவதைவிட பணமாக எடுக்கிறபோது வட்டி அதிகம். பொருட்கள் வாங்குகிறபோது, மாதத்துக்கு குறைந்தபட்சம் 2% வட்டி விதிக்கப்படும் எனில், பணமாக எடுத்தால் மாதத்துக்கு குறைந்தபட்சம் 4% அல்லது அதற்கும் அதிகமாகவே வட்டி விதிக்கப்படும்.  
இஎம்ஐ கணக்கிடும்போது ஃபிக்ஸட் ரேட் கணக்கிடும் முறை, உதாரணமாக 2 சதவிகித மாதாந்திர வட்டி என்று வைத்துக்கொள்வோம். ரூ.20,000 கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்துள்ளோம் என்றால், இதை இஎம்ஐ முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். (20,000X2/100=400 மாத வட்டி) இதை நமது இஎம்ஐ மாதங்களுக்கு ஏற்ப கணக்கிட்டுக் கொள்ளலாம். மாறுபடும் வட்டி விகிதத்தில் மாதாமாதம் கடன் நிலுவை குறையும்போது அதற்கேற்ப வட்டி கணக்கிடப்படும். அனுமதிக்கப்பட்ட அளவைத் (கிரெடிட் லிமிட்) தாண்டி பயன்படுத்த வேண்டாம். இதற்கு தனியாக கட்டணமும், வட்டியும் கணக்கிடப்படும். எனவே, அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். கிரெடிட் கார்டில் ஒவ்வொருநாளுக்கும் வட்டி கணக்கிடப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
பணமாக எடுத்திருந்தால், அதை ஸ்டேட்மென்டில் குறிப்பிடப்படும் தேதிக்குள் பணமாக கட்டிவிடுவது நல்லது. குறிப்பாக, காசோலையாகச் செலுத்தவும். காசோலையில் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்கான கட்டணம், அபராதம் அவற்றுக்கான இதர கட்டணங்கள் கணக்கிடப்படும்.

Loading...

No comments:

Post a Comment